ADDED : ஜூலை 24, 2011 11:11 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் ஆடித்திருக்கல்யாண திருவிழா,
நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி,நேற்று காலை கோவில் நவதி
மண்டபத்தில் பர்வதவர்த்தனி அம்பாள் எழுந்தருளினார். அம்பாளுக்கு சிறப்பு
பூஜைகள் செய்யப்பட்டன. திருவிழா குருக்கள் ஸ்ரீராம், கோவில் சர்வசாதகம்
கணபதிராமன் அம்பாள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். பின், பர்வதவர்த்தனி
அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம்
வழங்கப்பட்டது.கோவில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், உதவி கோட்டப் பொறியாளர்
மயில்வாகனன், கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், பேஷ்கார் ராதா மற்றும் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நாட்களான ஜூலை 30ல் ஆடி
அமாவாசை தீர்த்தவாரி உற்சவம், வெள்ளிரதம், ஆக., 1ல் அம்பாள் தேரோட்டம்,
ஆக., 3ல் அம்பாள் தபசு, பூப்பல்லக்கு, ஆக., 4ல் சுவாமி - அம்பாள்
திருக்கல்யாணம், ஆக., 9ல் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல்
நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா நாளில் தினமும் இரவில், கோவில் வடக்கு
நந்தவன கலையரங்கத்தில் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடைபெறும்.