UPDATED : மார் 05, 2024 07:43 AM
ADDED : மார் 05, 2024 05:24 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில், முன்னோருக்கு பரிகார பூஜைகள் செய்வதற்கான கட்டண வசூல் திட்டத்தை அறநிலையத்துறை திரும்ப பெற்றுள்ளது.
தீர்த்த தலமான ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி, கோவில் வளாகத்தில் உள்ள, 22 தீர்த்தங்களில் நீராடுவர். முன்னோர் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பக்தர்கள், அக்னி தீர்த்த கரையில் தர்ப்பணம் செய்வர்.
இந்த நடைமுறையில் கோவில் நிர்வாகம் நேரடியாக பக்தர்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டது. தில தர்ப்பணம், பிண்ட பூஜைகள், புரோகிதர் தட்சணை என, ஒரு கணிசமான தொகை வசூலித்து, கோவில் நிர்வாகமே பிரித்து கொடுக்க முடிவு செய்தது.
இதற்கு, பல்வேறு ஹிந்து அமைப்புகள், ஆன்மிக நல விரும்பிகள் மற்றும் பல்வேறு கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அத்திட்டத்தை திரும்பப் பெறுவதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவில் இணைக் கமிஷனர் சிவராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில் வாயிலாக அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும், முன்னோருக்கு பரிகார பூஜைகள் செய்ய, கட்டண சீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டது.
இது குறித்து ஆட்சேபனை இருந்தால், வரும் 20ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

