ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைப்படி விரைவில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: ரேஷன்கடை பணியாளர்கள் வலியுறுத்தல்
ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைப்படி விரைவில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: ரேஷன்கடை பணியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 04, 2026 04:17 AM

ராமநாதபுரம்: 'ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரையின்படி ரேஷன் கடை பணியாளர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தினகரன், செயலாளர் மாரிமுத்து கூறியதாவது: பொது வினியோகத்திட்டத்திற்கு தனித்துறை, உணவு பொருட்களை பொட்டலங்களாக வழங்கும் முறை, எடையாளர்கள் நியமனம், கல்வி தகுதிக்கேற்ப விற்பனையாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம், எடையாளருக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைளைவலியுறுத்திபிப்ரவரியில் போராட்டத்தில் ரேஷன்கடைபணியாளர்கள் ஈடுபட்டனர்.
மார்ச் 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு சங்க நிர்வாகிகளை அழைத்தனர். சென்னை மாநில பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர், அதிகாரிகள், சங்கத்தின் மாநில தலைவர் ஜெயசந்திரராஜா, பொதுச்செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் ஊதிய மாற்ற குழுவின் பரிந்துரையின் படி துறையின் அமைச்சர் ஒப்புதல் பெற்று ஊதிய உயர்வு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் விரைவில் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றனர்.

