ரேஷன் கடைகள் நேரம் மாறுகிறது: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரேஷன் கடைகள் நேரம் மாறுகிறது: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : மே 23, 2024 04:31 AM

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன.
மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன.
சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
எனவே, ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகிறது.

