ADDED : ஏப் 08, 2025 04:37 AM

சென்னை: 'தமிழகத்தில் பொது வினியோக திட்டத்திற்கு, தனித்துறை உருவாக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் தலைவர் ஜெயச்சந்திர ராஜா கூறியதாவது: ரேஷன் உணவுப் பொருட்கள் அனைத்தும், சரியான எடையில் தரமாக பாக்கெட்டில் வழங்கப்பட வேண்டும்.
ரேஷன் கடைகளில், விற்பனை முனைய கருவியின் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, பல துறை கட்டுப்பாட்டில் செயல்படும், பொது வினியோக திட்டத்திற்கு, தனித்துறை உருவாக்க வேண்டும்.
ரேஷன் ஊழியர் களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று ஒருநாள் ரேஷன் ஊழியர்கள், வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். மாவட்ட தலைநகரங்களில், ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர். இவ்வாறு கூறினார்.