அமலாக்கத்துறைக்கு காபி விருந்து வைத்து வரவேற்க தயார்: அமைச்சர் ரகுபதி
அமலாக்கத்துறைக்கு காபி விருந்து வைத்து வரவேற்க தயார்: அமைச்சர் ரகுபதி
UPDATED : பிப் 06, 2024 01:05 PM
ADDED : பிப் 06, 2024 12:50 PM

சென்னை: அமலாக்கத்துறை வந்தால் காபி விருந்து வைத்து வரவேற்று உபசரிக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோடநாடு வழக்கில் தடயவியல் ஆய்வாளர்கள் திருச்சியில் சோதனை நடத்தியதை பொறுத்தவரையில், அவர்கள் தங்களது கடமையை செய்துள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும். பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகிய இருவருமே பா.ஜ.,வின் கொத்தடிமைகள். இருவரும் தங்களது கட்சியை பா.ஜ.,வினரிடம் அடகு வைத்துவிட்டனர்.
மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்பதால் பா.ஜ.,வின் அண்ணாமலை கூறுவதை போன்று அமலாக்கத்துறை வந்தாலோ, வருமான வரித்துறை வந்தாலோ நாங்கள் கவலைப்பட போவதில்லை. அமலாக்கத்துறையை எந்த நேரத்திலும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அமலாக்கத்துறை வந்தால் காபி விருந்து வைத்து வரவேற்று உபசரிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

