UPDATED : ஆக 07, 2025 03:07 AM
ADDED : ஆக 07, 2025 12:39 AM
சென்னை:தமிழக விவசாயிகளிடம், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, மத்திய அரசு வழங்கிய அவகாசம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதுவரை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், 3,742 டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. இதனால், அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி இலவச கேழ்வரகு கிடைக்க வாய்ப்பில்லை.
ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக நீலகிரி, தர்மபுரியில் அரிசிக்கு பதில் தலா, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
தமிழக விவசாயிகளிடம் இருந்து நடப்பு சீசனில், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, வாணிப கழகத்துக்கு இந்திய உணவு கழகம் ஒப்புதல் அளித்தது.
கேழ்வரகு வழங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ, 42.90 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த நவ., 1 முதல் இந்தாண்டு ஜன., 31 வரை கேழ்வரகு கொள்முதல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்படி, விளைச்சல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகம் விடுத்த கோரிக்கையை ஏற்று, இம்மாதம், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று வரை, 3,742 டன் கேழ்வரகு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது .
கடந்த சீசனிலும், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதில், 1,889 டன் மட்டுமே கிடைத்தது. கடந்த இரு சீசன்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவு கேழ்வரகு கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், அனைத்து ரேஷன் கடைகளிலும் கேழ்வரகு இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேழ்வரகு கொள்முதல் விழிப்புணர்வு அவசியம்
தமிழகத்தில் கிருஷ்ணகிரி,
தர்மபுரி மாவட்டங்களில் தான், கேழ்வரகு விளைச்சல் அதிகம் உள்ளது. அம்மாவட்ட
விவசாயிகளிடம் இருந்து, பிஸ்கட், ஊட்டச்சத்து மாவு தயாரிக்கும்
நிறுவனங்கள், பல ஆண்டுகளாக, கேழ்வரகு கொள்முதல் செய்து வருகின்றன. அரசின்
சார்பில், கடந்த இரு ஆண்டுகளாகத்தான் கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுகிறது.
தனியார் நிறுவனங்களை விட, அரசு வழங்கும் விலை அதிகம் இருந்தாலும், பல
விவசாயிகளுக்கு இந்த தகவல் தெரியவில்லை.
எனவே, விவசாயிகள் வழக்கம்போல்,
பிஸ்கட் நிறுவனங்களுக்கு,கேழ்வரகை விற்பனை செய்து வருகின்றனர். எனவே, அரசு
கேழ்வரகு கொள்முதல் செய்வது குறித்து, வேளாண் அதிகாரிகள் விவசாயிகளிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.