எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கு விபரங்கள் தர மறுப்பு; ஐகோர்ட்டில் த.வெ.க., வழக்கு
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கு விபரங்கள் தர மறுப்பு; ஐகோர்ட்டில் த.வெ.க., வழக்கு
ADDED : ஜூலை 15, 2025 12:32 AM

சென்னை: தமிழகத்தில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்குமாறு, மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி, த.வெ.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க., சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் ஆதித்யசோழன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் தற்போது பதவியில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்குமாறு, கடந்தாண்டு நவம்பர் மாதம், தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.
அதில், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விபரங்களையும் கோரியிருந்தேன்.
என் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தேன்; ஆனாலும், தகவல்கள் வழங்கப்படவில்லை.
பொது மக்கள் நலன் கருதி கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது, அடிப்படை உரிமை மீறும் செயல்.
எனவே, தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்க வேண்டும் என, மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.