பத்திரத்தை பதிவு செய்ய மறுத்தது தவறு: ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் விளக்கம்
பத்திரத்தை பதிவு செய்ய மறுத்தது தவறு: ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் விளக்கம்
ADDED : ஆக 05, 2026 04:30 AM
சென்னை : 'திருவாரூர் மாவட்டம், விளக்குடி கிராமத்தில் சொத்து விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய, திருத்துறைபூண்டி சார் - பதிவாளர் மறுத்தது சரியல்ல' என, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், விளக்குடி கிராமத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்துக்கு சொந்தமான, 8.7 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான பத்திரம், திருத்துறைபூண்டி சார் - பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆசிரமம், மடம் போன்ற மத நிறுவனங்களின் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் போது, பதிவு சட்டத்தின், '22ஏ' பிரிவின் அடிப்படையில், உரிய அதிகார அமைப்பின் ஒப்புதல் பெற வேண்டும் என, பத்திரம் நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பான செய்தி நம் நாளிதழில், ஆக., 3ல் வெளியானது.
இது குறித்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்துக்கு, திருவாரூர் மாவட்டம் விளக்குடி கிராமத்தில், 8.7 ஏக்கர் நிலம் தானமாக கொடுக்கப்பட்டது. தானமாக கொடுக்கப்பட்டபோது, ஸ்ரீவேதாந்த ராமானுஜ மகாதேசிகன் பீடாதிபதியாக இருந்ததால், வருவாய் துறையில், 'அ' பதிவேட்டில் அந்த பெயர் இடம் பெற்றது.
இதன் காரணமாக, திருத்துறைபூண்டி சார் - பதிவாளர் அந்த நிலத்தை கிரையம் செய்ய மறுத்துள்ளார்.
இந்த ஆசிரமம், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்திர நிறுவனம். எனவே, பதிவு சட்டத்தின், '22ஏ' பிரிவு இந்த ஆசிரமத்துக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
