நேபாளத்தில் மாயமானோரின் உறவினர்கள் திடீர் போராட்டம்
நேபாளத்தில் மாயமானோரின் உறவினர்கள் திடீர் போராட்டம்
ADDED : செப் 16, 2026 06:12 AM
சென்னை: நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களின் உறவினர்கள், தலைமைச் செயலகம் முன், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
நேபாளத்தில், கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில், தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்ற 305 பேர் சிக்கினர். அவர்களில், 220 பேர் மீட்கப்பட்ட நிலையில், 85 பேரை காணவில்லை. அவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்காமல், அவர்களின் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டையிலிருந்து, தனியார் ஏஜன்சி வாயிலாக நேபாளம் சென்று மாயமானவர்களில், 49 பேரின் உறவினர்கள், நேற்று தலைமைச் செயலகம் வெளியே, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்திய போலீசார், ஐந்து பேரை அழைத்து சென்று, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, துறை செயலர் சுந்தரவள்ளி ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
சந்திப்பு குறித்து, அவர்கள் கூறியதாவது:
நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டு 20 நாட்களாகி விட்டன. இதுவரை அங்கு சென்ற தமிழர்கள் குறித்த, எந்த விபரமும் தெரியவில்லை. தமிழக அரசு தரப்பில், நேபாளத்தில் மட்டும் தேடி வருகின்றனர். ஆனால், சீனாவின் எல்லையில், இந்த பெருவெள்ள சம்பவம் ஏற்பட்டது. இதனால், பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், சீனாவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து, சீனாவிடம் தகவல்களை கேட்க வேண்டும். அதேபோல், தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பி, சீனாவிலும் காணாமல் போன தமிழர்களை, தேடும் பணிகளை தொடங்க வேண்டும் என, அமைச்சர் மற்றும் செயலரிடம் தெரிவித்தோம். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக, அவர்கள் உறுதி அளித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
