தி.மு.க.,வினருக்கு மட்டும் நிவாரணமா? போராட்டம் வெடிக்கும்: ராமதாஸ்
தி.மு.க.,வினருக்கு மட்டும் நிவாரணமா? போராட்டம் வெடிக்கும்: ராமதாஸ்
UPDATED : ஜூலை 05, 2025 12:16 PM
ADDED : ஜூலை 05, 2025 02:56 AM

சென்னை: 'என்.எல்.சி.,யால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் மாவட்டம், நெய்வேலி, கரிவெட்டி கிராமத்தில், என்.எல்.சி., சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில், இழப்பீடு, கருணைத் தொகை வழங்கியதில், தி.மு.க., கவுன்சிலர், அக்கட்சி நிர்வாகிகளின் குடும்பங்களை சார்ந்தவர்கள் மட்டுமே பலன் அடைந்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேல், கரிவெட்டியில் வசிக்கும் குடும்பங்களுக்கு கருணைத் தொகை வழங்குவதில், என்.எல்.சி., நிர்வாகம் பாரபட்சம் காட்டுகிறது.
ஆனால், கோரிக்கை வைக்காமலேயே, தி.மு.க.,வினரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டை என்.எல்.சி., கொடுத்துள்ளது.
கரிவெட்டி மக்களுடன் இணைந்து, என்.எல்.சி.,க்கு எதிராக போராடுவது போன்ற ஒரு பிம்பத்தை, தி.மு.க., கவுன்சிலரும், அக்கட்சியினரும் கட்டமைத்தனர். இதெல்லாம் அழகாய் ஜோடிக்கப்பட்ட அரசியல் என்பதை, அக்கிராம மக்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.
கரிவெட்டி மக்களுக்கு மாற்றுமனை வழங்குவதிலும், என்.எல்.சி., பாரபட்சம் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி கிராமத்தில் குடியிருப்புகளை அகற்றவும், மின் இணைப்புகளை துண்டிக்கவும் என்.எல்.சி., அதிகாரிகள் நேற்று சென்றனர்.
அதையறிந்த கிராம மக்கள் திரண்டு, என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு, இழப்பீடு கோரி கோஷமிட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அவர்களிடம், டி.எஸ்.பி., விஜிகுமார் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அப்போது, ஏற்கனவே நிவாரணம் பெறுவதில் விடுபட்டவர்களுக்கு ஒரு மாதத்தில் இழப்பீடு மற்றும் மாற்று குடியிருப்பு வழங்கிய பின், வீடுகளை அகற்றுவதாக என்.எல்.சி., அதிகாரிகள் கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.