கூட்டணி பேச்சு நடத்த தயக்கம்; காங்.,கை 'கழற்று'கிறது தி.மு.க.,?
கூட்டணி பேச்சு நடத்த தயக்கம்; காங்.,கை 'கழற்று'கிறது தி.மு.க.,?
UPDATED : பிப் 06, 2026 12:58 AM
ADDED : பிப் 06, 2026 12:57 AM

'கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால், பா.ஜ.,வின் அழுத்தம் குறையும்' என, தி.மு.க., தலைமைக்கு அமைச்சர்கள் சிலர் யோசனை தெரிவித்து உள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்வது தொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுலை, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி சமீபத்தில் டில்லியில் சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார்.
அதில், எந்தவொரு உத்தரவாதத்தையும் கனிமொழியிடம் ராகுல் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதனால், தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பணிகளை துவங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது, தி.மு.க., கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், மத்திய பா.ஜ., அரசின் அழுத்தம் குறையும் எனவும் அவர்கள் ஆலோசனை கூறியதாக தெரிகிறது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், முதல்வர் ஸ்டாலினை, மூத்த அமைச்சர்கள் சிலர் சந்தித்து பேசினர்.
அப்போது, அவர்கள் கூறியுள்ளதாவது: தி.மு.க.,விற்கு நம்பிக்கையான கட்சியாக இருக்க வேண்டிய காங்கிரஸ், தேர்தல் நேரத்தில் தொடர் நெருக்கடி தருகிறது. அந்த கட்சிக்கு, 5 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு வங்கி மட்டுமே உள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் ஒரே காரணத்திற்காக, மத்திய அரசும், பா.ஜ.,வும், தி.மு.க.,வுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. காங்கிரஸ் கூட்டணியால், ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில், பா.ஜ.,விடம் விரோதம் தான் வளர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டால், தி.மு.க., மீதான பா.ஜ.,வின் அழுத்தம் குறையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், 'காங்கிரஸ் கட்சியை நாமாக வெளியேற்ற வேண்டாம்; அவர்களாக வெளியேறினால், அதை பற்றி கவலைப்பட வேண்டாம்' என அமைச்சர்களிடம் கூறி உள்ளார்.
- நமது நிருபர் -

