வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு தர வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு தர வேண்டுகோள்
ADDED : அக் 30, 2025 01:34 AM
சென்னை:'முழுமையான, துல்லியமான, பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்க, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு, ஒவ்வொரு வாக்காளரின் பங்களிப்பும் முக்கியமானது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின், அவர் வெளியிட்ட அறிக்கை:
வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல், துல்லியமாகவும், பிழையற்றவையாகவும் இருப்பதை உறுதி செய்வது, இதன் நோக்கம்.
நவ.,4ம் தேதி முதல் டிச.,4ம் தேதி வரை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடுதோறும் சென்று, தற்போதைய வாக்காளர்களுக்கு முன்பே, நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வினியோகம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீண்டும் சேகரிப்பர்.
அப்போது, அங்கு இல்லாதவர்கள், இடம் மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டை ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் அடையாளம் காணப் படுவர்.
புதிய தகுதியுள்ள வாக்காளர்களின் விபரங்கள் சேகரிக்கப்படும்.
எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற, ஓட்டுச்சாவடி அலுவலர், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை செல்வர்.
வீடுதோறும் கணக்கீட்டு பணிக்கு வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

