வாடகை வீடு வசதி ஆணைய உத்தரவுகளை வெளியிட கோரிக்கை
வாடகை வீடு வசதி ஆணைய உத்தரவுகளை வெளியிட கோரிக்கை
ADDED : ஆக 16, 2026 10:57 PM
சென்னை: 'தமிழகத்தில், வாடகை வீடு வசதி ஆணையங்கள் மற்றும் தீர்ப்பாயங்களின் உத்தரவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும்' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில், 48.45 சதவீதம் பேர், நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்றனர்.
இவர்களில், 24 சதவீதம் பேர், வாடகை வீடுகளில் வசிப்பதாக, அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நகர்ப்புற பகுதிகளில், வாடகைக்கு வீடு பெறுவதும், கொடுப்பதும், மிக முக்கிய நிகழ்வாக மாறி உள்ளது.
வாடகை கட்டுப்பாடு சட்டத்துக்கு மாற்றாக, தமிழக அரசு, 2017ம் ஆண்டு, வாடகை வீட்டு வசதி சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம், 2019ம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையில், இதற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.
இதன்படி, வீட்டை வாடகைக்கு விடுவோர், அதை மாவட்டம் மற்றும் கோட்ட அளவில் உள்ள வாடகை வீட்டு வசதி ஆணையங்களில், பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வீடுகள் தொடர்பான, வாடகை பிரச்னை வழக்குகளை மட்டுமே, ஆணையம் மற்றும் தீர்ப்பாயம் விசாரிக்கும்.
எனவே, வாடகை வீட்டுவசதி சட்டத்தில், பதிவு செய்வது அவசியமாகிறது. தற்போதைய நிலவரப்படி, வாடகை வீட்டு வசதி சட்டத்தின் கீழ் வரும் புகார்கள் விசாரிக்கப்பட்டு, ஆணையங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த உத்தரவுகள், சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமே, அறிந்து கொள்ளக் கூடிய நிலையில் உள்ளன.
இது குறித்து, பொது மக்கள் கூறியதாவது:
வாடகை வீட்டுவசதி சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இது தொடர்பாக சில வழக்குகளை ஆணையங்கள், தீர்ப்பாயங்கள் விசாரிக்கின்றன. ஆனால், இதில் வழங்கப்படும் உத்தரவுகள் என்ன என்பதை, பொது மக்கள் பார்வைக்கு வெளியிடுவதில்லை.
இதனால், வாடகை வீடு சம்பந்தமான பிரச்னையில் பாதிக்கப்படுவோர், இந்த ஆணையங்களை எப்படி அணுகுவது எனத் தெரியாமல் தவிக்கின்றனர். எனவே, மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்த உத்தரவுகளை இணையதளம் வாயிலாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வாடகை வீட்டுவசதி ஆணையம் மற்றும் தீர்ப்பாய உத்தரவுகளை வெளியிட, எவ்வித தடையும் இல்லை. இது விஷயத்தில், அரசின் வழிகாட்டுதல் பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்' என்றார்.
