'ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது'
'ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது'
ADDED : ஜூன் 16, 2025 06:02 AM

சென்னை, : ''ரிசர்வ் வங்கியின் பல்வேறு கட்டுப்பாடுகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பொருந்தாது,'' என, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் வங்கிகள், ரிசர்வ் வங்கி வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், நம்முடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வராது.
தமிழகத்தில், 4,750 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அவற்றுக்கு ரிசர்வ் வங்கி வழிமுறைகள் பொருந்தாது.
நபார்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம், நிதி ஆதாரத்தை கேட்டுள்ளோம். விவசாயிகள், நெசவாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் போன்றோருக்கு, பல மடங்கு கடன் உயர்த்தி வழங்கப்படுகிறது.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் 10,200 கோடி; இரண்டாம் ஆண்டில் 12,300 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
நடப்பாண்டில் 17,000 கோடி ரூபாய் இலக்கு கடன் தர நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு, நகைக்கடன் போன்றவற்றை வழங்க நிதி ஆதாரம் தேவை. எனவே, வாய்ப்பு உள்ள இடங்களில் நிதி கேட்டு பெறுகிறோம்.
நபார்டு வங்கி புதிதாக நிதி வழங்கவில்லை; ஆண்டுதோறும் கிடைக்கும் நிதி தான். அதை, நடப்பாண்டில் உரிய நேரத்தில் வழங்க கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.