ADDED : ஜூலை 29, 2025 07:27 AM
சென்னை : 'தமிழக உயர் கல்வியின் தரத்தை மீட்டெடுக்க, அவசர நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய கல்விக் கொள்கை குறித்து சரியான புரிதல் இல்லாததாலும், மாநிலத்துக்கு உரிய கொள்கையை உருவாக்காததாலும், மாநில பல்கலைகள் குழப்பத்தில் உள்ளன. துணை வேந்தர்கள், பதிவாளர்கள், கணக்கு அலுவலர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால், முடிவெடுப்பதில் தாமதமும், கற்பித்தலில் தரமின்மையும் உள்ளது.
அரசின் அதிகார தலையீடுகளால் பல்கலைகளும், உறுப்பு கல்லுாரிகளும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. நிதிப்பற்றாக்குறை, காலாவதியான பாடத்திட்டம், ஆய்வகங்கள், நுாலகங்கள், விடுதிகளில் வசதியில்லாமை உள்ளிட்ட காரணங்களால், கற்றலும் ஆய்வுப் பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
அதனால், சுதந்திரமான ஆள்சேர்ப்பு, பாடத்திட்டம் உருவாக்கம் உள்ளிட்டவற்றுக்கு குழு அமைக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பி, 'டிஜிட்டல்' உள்கட்டமைப்புகள் உருவாக்கி, சுயாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களாக பல்கலைகள் செயல்பட, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.