ADDED : செப் 01, 2026 02:57 AM
சென்னை: 'கட்டுமானப் பணிக்கு தேவையான, 'சிமென்ட்' விலை, மூட்டைக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளது' என, கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், சில மாதங்களுக்கு முன், சிமென்ட் விலை, 330 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, எரிபொருள் வருகை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், சிமென்ட் விலை, மூட்டைக்கு 40 ரூபாய் வரை உயர்ந்தது. அப்போது, கட்டுமானப் பணிகளுக்கான 'சிமென்ட்' தேவை அதிகமாக இருந்ததால், விலை உயர்வை மக்கள் சகித்துக் கொண்டனர்.
வளைகுடா நாடுகளில், போர் பதற்றம் ஓரளவு தணிந்த நிலையில், சிமென்ட் விலையை, சில உற்பத்தியாளர்கள் குறைக்க தொடங்கினர். இதனால், நாடு முழுதும் சிமென்ட் விலை, மூட்டைக்கு 342 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், தற்போது சிமென்ட் விலை மூட்டைக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
இது குறித்து, கட்டுமானத் துறையினர் கூறியதாவது:
நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில், பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக குறைந்துள்ளன.
இதன் காரணமாக, 'சிமென்ட்' விற்பனை குறைவதை கருத்தில் வைத்து, உற்பத்தியாளர்கள் 'சிமென்ட்' விலையை, உயர்த்தி உள்ளனர். இதனால், தற்போது மூட்டைக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
