'டாஸ்மாக்'கில் ரூ.1000 கோடி ஊழல் புகார்: இயக்குனர், பொது மேலாளர்களுக்கு 'சம்மன்'
'டாஸ்மாக்'கில் ரூ.1000 கோடி ஊழல் புகார்: இயக்குனர், பொது மேலாளர்களுக்கு 'சம்மன்'
ADDED : ஏப் 25, 2025 05:14 AM

சென்னை: 'டாஸ்மாக் நிறுவனத்தில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதால், அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, அந்நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொது மேலாளர்களுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில், 'டாஸ்மாக்' நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் மது ஆலைகளில் இருந்து, மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும், 4,830 சில்லரை கடைகள் வாயிலாக விற்கிறது.
இந்நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அதன் அடிப்படையில், கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இச்சோதனையில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடரலாம் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, டாஸ்மாக் ஊழல் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, அதன் இயக்குநர் விசாகன், பொது மேலாளர்கள் சங்கீதா, ராமதுரை முருகன் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர்.