ரூ.20 கோடி பறிமுதல் வைரம் போலீசாரால் ஆட்டை? கோர்ட்டில் சமர்ப்பித்த கற்கள் போலி வியாபாரி பகீர்
ரூ.20 கோடி பறிமுதல் வைரம் போலீசாரால் ஆட்டை? கோர்ட்டில் சமர்ப்பித்த கற்கள் போலி வியாபாரி பகீர்
ADDED : மே 16, 2025 11:33 PM
சென்னை:'வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, 20 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வைர கற்களுக்கு பதிலாக, அதேபோல தயாரித்த போலி வைர கற்களை, போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்' என, மாநகர போலீஸ் கமிஷனரிடம் வைர வியாபாரி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர், டவர் வியூ காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர், 56; வைர வியாபாரி. சில தினங்களுக்கு முன் சந்திரசேகர், தன்னிடமிருந்த, 20 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வைர கற்களை விற்பதற்காக, வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். அப்போது, வைர கற்களை வாங்கப்போவதாக கூறி அழைத்தவர்கள், அவரை கட்டிப்போட்டு, வைரங்களை பறித்துச் சென்றனர். பின், கட்டப்பட்ட நிலையில் இருந்த சந்திரசேகரை, ஹோட்டல் ஊழியர்கள் மீட்டனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடபழனி போலீசார், வைர கற்களை கொள்ளையடித்து சென்ற, திருநெல்வேலியை சேர்ந்த ஜான் லாயட், 34, சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், 24, திருவேற்காட்டை சேர்ந்த ரதீஷ், 28, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், 35 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். வைர கற்களையும் பறிமுதல் செய்தனர்.
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்களை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். ஆனால், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட வைரகற்கள் ஒரிஜினல் இல்லை என்பதை அறிந்த வியாபாரி சந்திரசேகர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில், கமிஷனர் அருணிடம் அவர் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
இம்மாதம், 8ம் தேதி நான்கு வைரகற்களை, நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அந்த வைர கற்கள் ஒரிஜினல் இல்லை. அவை போலீசாரால் தயாரிக்கப்பட்ட போலி வைரகற்கள். அவை போலியானது என்பதை, நீதிபதியும் மதிப்பீட்டாளர்கள் வாயிலாக அறிந்து கொண்டார். ஏற்கனவே மதிப்பீட்டாளர்கள் சமர்ப்பித்த ஆவணத்தை வைத்து, சரிபார்க்கவும் உத்தரவிட்டார்.
எனக்கு சொந்தமான பழமையான, 20 கோடி மதிப்பிலான வைர கற்களை மீட்டு தாருங்கள். மோசடியில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, 'வியாபாரி சந்திரசேகர் அளித்த புகார் முற்றிலும் பொய்யானது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்றார்.