"டிவி' கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.43 கோடி இழப்பு
"டிவி' கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.43 கோடி இழப்பு
ADDED : ஆக 25, 2011 10:57 PM

சென்னை : ''முந்தைய, தி.மு.க., அரசு, தேர்தல் நெருக்கத்தில் ஆறாவது கட்டமாக 'டிவி' கொள்முதல் செய்ததில், அரசுக்கு, 43 கோடியே, 60 லட்ச ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்,'' என, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில், தகவல் தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட ஐ.டி., பார்க்குகள், சரியான முறையில் உருவாக்கப்படவில்லை.
இதனால், எலும்பும் தோலுமாக காட்சியளிக்கின்றன. இவற்றை சரிசெய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட சில நகரங்களில், ஐ.டி., பார்க்குகள் அமைக்காமல், பரவலாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ஐ.டி., பார்க்குகள் உருவாக்கப்படும்.
முந்தைய ஆட்சியில், இலவச 'டிவி' கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருக்கிறது என, அ.தி.மு.க., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு, 'முறைகேடு நடந்திருந்தால் தூக்கு மேடை ஏறவும் தயார்' என, கருணாநிதி கூறினார்.
தேர்தல் நேரத்தில், தி.மு.க., அரசு ஆறாவது கட்டமாக, 'டிவி' கொள்முதல் செய்ததில், முந்தைய விலையை விட, 436 ரூபாய் கூடுதலாக வழங்கியதில், அரசுக்கு, 43 கோடியே, 60 லட்ச ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். அரசு கேபிள் நிறுவனத்தை முடக்கிவிட்டு, தங்கள் சொந்த நிறுவனம் லாபம் சம்பாதிக்க, கொள்ளை அடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். இப்போது, தூக்கு மேடைக்குச் செல்ல கருணாநிதி தயாரா? இவ்வாறு அமைச்சர் பேசினார்.