பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!
பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!
UPDATED : ஏப் 15, 2025 08:25 PM
ADDED : ஏப் 15, 2025 07:53 PM

மதுரை: மதுரை மாவட்டம் மேலுார் கச்சிராயன்பட்டியில் பட்டா மாறுதலுக்கு முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., துரைபாண்டி மற்றும் அலுவலக உதவியாளர் பாக்கியலட்சுமி கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் மலைச்செல்வம். இவர் தனது தந்தை ராமு பெயரில் உள்ள இடத்தை பட்டா மாறுதல் செய்ய கச்சிராயன்பட்டி வி.ஏ.ஓ., துரைப்பாண்டியிடம் மனு கொடுத்தார். மனுவை பரிசீலனை செய்த வி.ஏ.ஓ., பட்டா மாறுதலுக்கு 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். 7,000 தருவதாக மலைச்செல்வம் ஒப்புக்கொண்டார்.
லஞ்ச விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 7,000 ரூபாயை வி.ஏ.ஓ., துரைப்பாண்டியின் தனிப்பட்ட உதவியாளர் சுந்தர்ராஜபுரம் பாக்கியலட்சுமியிடம் மலைச்செல்வம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பாபு, பாரதி பிரியா உள்ளிட்டோர் துரைப்பாண்டி, பாக்கியலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.