கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 ஊதியம் உயர்வு அறிவிப்பு; பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 ஊதியம் உயர்வு அறிவிப்பு; பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
ADDED : பிப் 27, 2026 06:27 AM

சென்னை: கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 5,000 ரூபாய் ஊதிய உ யர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர்.
தமிழகம் முழுதும் உள்ள, 184 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 8,741 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, 25,000 ரூபாய் மாத தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., நிர்ணயித்தபடி, 57,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்; தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம், மகப்பேறு விடுப்பு உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9ம் தேதி முதல், பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 'கவுரவ விரிவுரையாளர் ஊதியம் 5,000 ரூபாய் உயர்த்தப்பட்டு, மார்ச் 1 முதல், 30,000 ரூபாயாக வழங்கப்படும்' என, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கவுரவ விரிவுரையாளர் ஊதியத்தை, 25,000 ரூபாயில் இருந்து, 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு கலை அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், அரசு இன்ஜினியரிங் கல்லுாரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் ஆகியோருக்கு, மார்ச் 1 முதல் மாதம்தோறும், 30,000 ரூபாய் ஊதியம் பெறலாம்.
அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி தற்காலிக விரிவுரையாளர்களுக்கு, 20,000 ரூபாயில் இருந்து, 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 53 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊதிய உயர்வு அறிவிப்பை தொடர்ந்து, தமிழகம் முழுதும் நடந்து வந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை, கவுரவ விரிவுரையாளர்கள் வாபஸ் பெற்றனர்.
'அப்பட்டமான ஏமாற்று வேலை'
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, 57,700 ரூபாயாக பல்கலை மானியக் குழு நிர்ணயித்து உள்ள நிலையில், அதில் பாதியை கூட தாண்டாத அளவுக்கு, இப்படியொரு அறிவிப்பை வெளியிட்ட, தி.மு.க., அரசின் ஆணவம் கண்டனத்திற்கு உரியது. இது அப்பட்டமான ஏமாற்று வேலை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

