ADDED : டிச 18, 2024 08:59 AM
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும், 'ஆன்லைன்' வழியாக பெற, 'kooturavu' என்ற மொபைல் போன் செயலி, இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த செயலியில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் வழங்கும் பல்வேறு கடன் குறித்த விபரங்களை பெறலாம். மேலும், செயலியின் கடன் விண்ணப்பத்தில், உரிய விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சம்பந்தப்பட்ட சங்கம் மற்றும் வங்கிக்கு, 'ஆன்லைன்' வழியாக சமர்ப்பிக்கப்பட்டு, கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுவரை செயலி வாயிலாக, 5,034 பேர் கடனுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அதில், 4,900 பேருக்கு, 60 கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன என்று, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.