ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல: முதல்வரை எச்சரிக்கிறார் அண்ணாமலை
ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல: முதல்வரை எச்சரிக்கிறார் அண்ணாமலை
ADDED : ஜூலை 02, 2025 02:10 PM

சென்னை: '' சமூக வலைத்தளப் பதிவுகளுக்காக, பா.ஜ.,வினரைக் கைது செய்யும் சிறுபிள்ளைத்தனத்தைத் தொடர்வது சரியல்ல. ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல'' என முதல்வர் ஸ்டாலினை தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை: சமூக வலைத்தளப் பதிவுக்காக, தமிழக பா.ஜ.,வைச் சார்ந்த பிரவீண் ராஜ் கைது செய்யப்பட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தனியாக வசிக்கும் முதியோர்கள் கொலை செய்யப்படுவது என, சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் ஆயிரம் இருக்கிறது.
ஆனால், தி.மு.க., அரசின் நிர்வாகத் தோல்விகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி விடக்கூடாது என்பதற்காக, முழுநேரமாக தமிழக போலீசாரை, சமூக வலைதளங்களைக் கண்காணிக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்க முதல்வர் ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா?
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர்கள், என அனைவரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க.,வினர் மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் ஸ்டாலின் அரசு, சாதாரண சமூக வலைத் தளப்பதிவுகளுக்காக, பா.ஜ.,வினரைக் கைது செய்யும் சிறுபிள்ளைத் தனத்தைத் தொடர்வது சரியல்ல. ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.