எஸ்-பாண்ட் அலைக்கற்றை விவகாரம் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு
எஸ்-பாண்ட் அலைக்கற்றை விவகாரம் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு
ADDED : ஜூலை 12, 2011 12:40 AM
புதுடில்லி : எஸ்-பாண்ட் அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கிய தேவாஸ் மல்டி மீடியா நிறுவனம், ஆன்டிரிக்ஸ் உடனான தன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து தேவாஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,'ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துடனான தேவாசின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது, ஒப்பந்த விதிகளை மீறும் செயல். அதனால், இதுகுறித்து சர்வதேச வர்த்தக அமைப்பின் ஒரு அங்கமாக செயல்படும், சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர, தேவாசுக்கு உரிமை உண்டு. அதனடிப்படையில், ஒப்பந்த ரத்தை எதிர்த்தும், அது தொடர வேண்டும் என உத்தரவிடக்கோரியும், வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.
வழக்கு தொடுக்கப்பட்டது குறித்து, வேறு விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. அதேநேரம், ஒப்பந்தத்தைத் தொடர வேண்டும் என, ஆன்டிரிக்சுக்கு சர்வதேச நடுவர் கோர்ட் அறிவுறுத்தும் என, தேவாஸ் நம்பிக்கையுடன் உள்ளது. 'இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின்' (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான, ஆன்டிரிக்ஸ், ஜிசாட் 6 மற்றும் 6ஏ என்ற இரு செயற்கைக் கோள்களுக்கு எஸ் - பாண்ட் அலைக்கற்றை ஒதுக்குவதற்காக, தேவாஸ் மல்டி மீடியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் 12 ஆண்டு காலத்துக்குப் போடப்பட்டது. ஆனால், எஸ் - பாண்ட் விவகாரத்தில், நாட்டுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வெளிவந்த குற்றச்சாட்டை அடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் குழு, ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.