ADDED : ஆக 12, 2011 02:09 AM
சேலம்:ஓமலூரில், இடத்தகராறு பிரச்னையைத் தீர்க்க, 2,000 ரூபாய் லஞ்சம்
வாங்கிய, எஸ்.எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில்,
சிறப்பு எஸ்.ஐ.,யாகப் பணியாற்றி வருபவர் பெருமாள்,53.
ஓமலூரைச் சேர்ந்த
மார்க்சிஸ்ட் நகரச் செயலர் வசந்தி என்பவர், இடப்பிரச்னை தொடர்பாக, பக்கத்து
வீட்டுக்காரர் தகராறு செய்வதாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கச்
சென்றார்.எஸ்.எஸ்.ஐ., பெருமாள், சி.எஸ்.ஆர்., பதிவு செய்து, விசாரிப்பதாகக்
கூறி, அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வசந்தி மீண்டும்
பெருமாளைச் சந்தித்த போது, 'சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க, 2,000
ரூபாய் லஞ்சம் தர வேண்டும்' என, பெருமாள் கேட்டார்.சேலம் லஞ்ச ஒழிப்பு
போலீசாரிடம், வசந்தி புகார் செய்தார். வசந்தியிடமிருந்து, எஸ்.எஸ்.ஐ.,
பெருமாள் பணத்தை வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை, கையும்
களவுமாகப் பிடித்து, கைது செய்தனர்.

