'எஸ்.சி., - எஸ்.டி., பிரச்னையை விரைவாக தீர்க்க நடவடிக்கை!'
'எஸ்.சி., - எஸ்.டி., பிரச்னையை விரைவாக தீர்க்க நடவடிக்கை!'
ADDED : அக் 08, 2024 12:40 AM

சென்னை: “பட்டியலின, பழங்குடியினர் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,” என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணைய தலைவர் தமிழ்வாணன் உறுதி அளித்தார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக இருந்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவகுமார் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
அதைத் தொடர்ந்து, புதிய தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி தமிழ்வாணன், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றார்.
முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர், தமிழ்வாணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின், தமிழ்வாணன் அளித்த பேட்டி:
ஆணையத்திற்கு வரும் பட்டியலின, பழங்குடியினர் தொடர்பான பொதுவான, தனிப்பட்ட பிரச்னைகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியலமைப்பு சட்டத்தை உறுதிப்படுத்தி, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே ஆணையத்தின் நோக்கம்.
ஆணையத்தில் 4,360 வழக்குகள் இருந்தன. அவற்றில், 3,595 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது, 765 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் கேடயமாக உள்ளது.
இவ்வாறு கூறினார்.
