UPDATED : நவ 23, 2025 12:15 AM
ADDED : நவ 22, 2025 11:45 PM

சென்னை, : சட்டசபை தேர்தலில் தி.மு.க., உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, தமிழக காங்கிரசில், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் த.வெ.க., தலைவர் விஜயுடன், பேச்சு நடந்து வருவதாக வெளியான செய்திகள் வதந்தி என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., பா.ம.க., மட்டுமின்றி விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், விஜய் தலைமையில்தான் கூட்டணி என, த.வெ.க., அறிவித்துள்ளது.
மேலிட பொறுப்பாளர் இந்நிலையில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய் விரும்புவதாகவும், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் உள்ளிட்ட சிலர், த.வெ.க., கூட்டணிக்கு முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
விஜயுடன் ராகுல் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்பட்டது. இதனால், தி.மு.க., ஆதரவாளர்கள், காங்கிரசை சமூக ஊடகங்களில் விமர்சிக்க துவங்கினர்.
இச்சூழலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான ஐவர் குழுவை, காங்., தேசிய தலைவர் கார்கே அமைத்து உள்ளார்.
இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை:
வரும் 2026 சட்டசபை தேர்தலையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாடலை துவங்க, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை, காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமைத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் அகில இந்திய செயலர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், 'பீஹார் தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா உறுதியாக இருக்கிறார்.
'காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ள ஐவர் குழு, தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.,வுடன் விரைவில் பேச்சு நடத்தும். இதற்கு வசதியாக தி.மு.க., சார்பில் ஒருங்கிணைப்பு குழுவை, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்' என்றார்.
வதந்தி ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த, காங்கிரஸ் தலைமை, 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். 'இண்டி' கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது.
அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு, இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 'விஜயுடன் பேச்சு என்ற யூகம் வதந்தி' என, சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

