முதலீட்டாளர்களுக்கு தெரியாமல் இனி பங்குகளை விற்க முடியாது புதிய மாற்றங்களை அறிவித்தது செபி
முதலீட்டாளர்களுக்கு தெரியாமல் இனி பங்குகளை விற்க முடியாது புதிய மாற்றங்களை அறிவித்தது செபி
ADDED : பிப் 07, 2026 01:42 AM

மு தலீட்டாளர்களின் நலன் காக்கவும், வர்த்தகத்தை எளிதாக்கவும் செபி பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது.
பங்குகள் அடமானம்: முதலீட்டாளர்கள் தங்களின் பணத் தேவைக்காக, அல்லது கூடுதலாக வர்த்தகம் செய்வதற்கு தேவையான தொகையை பெறுவதற்கு, பங்குகளை அடமானம் வைக்கின்றனர்.
இந்நிலையில், முதலீட்டாளர்கள் இனி பங்குகளை அடமானம் வைக்கும்போதும், ரத்து செய்யும்போதும் அனைத்து டெபாசிட்டரிகளும் ஒரே மாதிரியான தரப்படுத்தப்பட்ட படிவங்களை பயன்படுத்த வேண்டும்.
அடமானம் வாங்கிய நிறுவனம் அல்லது வங்கி, அந்த பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தால், அதற்கு முன்னதாக அந்த முதலீட்டாளருக்கு முறையான கால அவகாசத்துடன் கூடிய நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதனால், முதலீட்டாளர்களுக்கு தெரியாமல் பங்குகள் விற்கப்படுவது தடுக்கப்படும் என செபி தெரிவித்துள்ளது.
காலன்டர் ஸ்ப்ரெட்: பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட பங்கின் முன்பேர வர்த்தகத்தில், இந்த மாத ஒப்பந்தம் மற்றும் அடுத்த மாத ஒப்பந்தம் என இரண்டையும் வைத்திருப்பது, 'காலன்டர் ஸ்ப்ரெட்' எனப்படுகிறது. இந்த முறையில் வர்த்தகம் செய்பவர்களுக்கு, குறைந்த 'மார்ஜின்' தொகை செலுத்தும் வசதி உள்ளது. இந்நிலையில், முன்பேர வர்த்தக ஒப்பந்தம் முடியும் நாளில், குறிப்பிட்ட 'எக்ஸ்பைரி' ஆகும் ஒப்பந்தத்துக்கு இந்த சலுகை கிடைக்காது என செபி கூறியுள்ளது.
ஒப்பந்தம் முடிவடையும் நேரத்தில் மார்ஜின் தொகை திடீரென அதிகரிப்பதால், வர்த்தகர்களுக்கு ஏற்படும் நிதி சுமையை தவிர்க்கவும், சந்தை அபாயங்களை குறைக்கவும் இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
மியூச்சுவல் பண்டு டிமேட்: டிமேட் கணக்கில் தங்களின் மியூச்சுவல் பண்டு முதலீடுகளை வைத்திருப்பவர்கள், ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துகொள்ளும் எஸ்.டபுள்யு.பி., அல்லது, ஒரு திட்டத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றும் எஸ்.டி.பி., முறைக்கும் ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், டிமேட் முறையில், மியூச்சுவல் பண்டு முதலீடுகளை வைத்திருப்பவர்கள், நிலையான உத்தரவாக, ஒரு முறை பதிவு செய்தாலே, எஸ்.டபள்யு.பி., மற்றும் எஸ்.டி.பி., என்ற இரண்டும் தொடர்ந்து நடக்கின்ற வகையில் மாற்றம் செய்வதற்கான வரைமுறைகளை கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்வதாக செபி கூறியுள்ளது.
இதற்கான முன்வரைவு அறிக்கையை செபி வெளியிட்டுள்ளது. இந்த முன்வரைவு அறிக்கை குறித்து பொதுமக்களும் பங்குச் சந்தை பங்கேற்பாளர்களும் தங்கள் கருத்துகளை வரும் பிப்ரவரி 26,க்குள் சமர்ப்பிக்கலாம்.

