ADDED : மார் 28, 2024 07:27 AM

அண்ணாமலை போட்டியிடுவதால், கோவை தொகுதி அல்லோல கல்லோலப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி பலத்தை மீறி, படையப்பா போல, 'வெற்றிக்கொடி கட்டு...' என்று வருவாரா இல்லை அதிகார பலத்திற்கும், பண பலத்திற்கும் முன்னால் மண்டியிடுவாரா என்று, ஐ.பி.எல்., மேட்ச் போல தமிழகமே உற்று பார்க்கிறது.
அ.தி.மு.க., ஒரு பக்கம், 18 சதவீதம் ஓட்டு உள்ள நாயுடு சமூகத்தவரை வேட்பாளராக போட்டு, முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் ஒரு கை பார்த்து வருகிறது. மற்றொரு பக்கம், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் தி.மு.க., தேர்தல் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருந்தாலும், கொங்கு மண்டலம் தி.மு.க.,வுக்கு கிட்டத்தட்ட அயல்நாடு என்பதால், 'ரிஸ்கான' தொகுதியாகவே கோவையை அந்த கட்சி பார்க்கிறது.
அண்ணாமலையை வீழ்த்த அ.தி.மு.க., முனைப்பாக இருந்தாலும், அதைவிட தி.மு.க., 10 மடங்கு முனைப்பாக இருக்கிறது. காரணம், தங்கள் கணக்கு தப்பிவிடுமோ என்ற அச்சத்தில் கட்சி இருப்பதாக தி.மு.க., உள்ளூர் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

