அண்ணாமலைக்கு துணை நிற்போம்: மும்பை பேச்சுக்கு சீமான் ஆதரவு
அண்ணாமலைக்கு துணை நிற்போம்: மும்பை பேச்சுக்கு சீமான் ஆதரவு
UPDATED : ஜன 15, 2026 03:00 AM
ADDED : ஜன 15, 2026 02:42 AM

சென்னை: 'மும்பை ராஜ் தாக்கரேயின் வன்முறை பேச்சு, அண்ணாமலையை மட்டு மல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும்; அண்ணாமலைக்கு நாங்கள் துணை நிற்போம்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
'மும்பை மஹாராஷ்டிராவின் நகரம் அல்ல; அது சர்வதேச நகரம்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியது, அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதை ஏற்பதும் எதிர்ப்பதும் அவரவர் உரிமை. ஆனால், 'மும்பைக்கு வந்தால் அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன்' என்பதெல்லாம் ஏற்கத்தக்கது அல்ல. கண்டனத்திற்குரியது.
அண்ணாமலையின் கருத்தியல் கோட்பாடு, அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் முற்றிலும் முரண்படுகிறோம். இருப்பினும், கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக, அண்ணாமலை மும்பைக்கு வந்தால், அவரது கால்களை வெட்டுவேன் என்பது, ஒருபோதும் ஏற்புடையதல்ல.
நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் வன்முறை பேச்சு, அண்ணாமலை என்ற தனிநபரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும். அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

