ஆன்மிகத்தை அரசியலாக்க கூடாது பா.ஜ.,வுக்கு சேகர்பாபு எச்சரிக்கை
ஆன்மிகத்தை அரசியலாக்க கூடாது பா.ஜ.,வுக்கு சேகர்பாபு எச்சரிக்கை
ADDED : பிப் 17, 2025 04:19 AM

சென்னை: “ஆன்மிகத்தில் தலையிட்டு அரசியலாக்க நினைக்கிற அண்ணாமலையின் கபட நாடகம், தமிழகத்தில் எடுபடாது,” என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் குளம் திறப்பு மற்றும் ஐ.சி.எப்., கமல விநாயகர் கோவில் பாலாலயத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
பழனி கோவிலில், 96 கோடி ரூபாயில் முதற்கட்ட வரைவு பணிகள் நடக்கின்றன. இரண்டாம் பெருந்திட்ட வரைவு பணிகளுக்கு, 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்த, 58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மாஸ்டர் பிளான், 136 கோடி ரூபாயில் தயார் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்துாரில், 450 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடக்கின்றன. அவற்றில் சிலவற்றை முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.
ஆன்மிகத்தில் தலையிட்டு அரசியலாக்க நினைக்கிற அண்ணாமலையின் கபட நாடகம் தமிழகத்தில் எடுபடாது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளவரை, அவருடைய கனவு பகல் கனவுதான்.
சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, அரசியல் நடத்த அண்ணாமலை முயற்சிக்கிறார்.
இந்த மண்ணில் பிரிவினைக்கு இடமே இல்லை. எனவே, ஜாதி, மதம், இனம் மற்றும் மொழியால் மக்களை பிளவுபடுத்துகிற இயக்கங்களுக்கு, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் பதிலடி தருவர்.
தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், 817 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, 101 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
அண்ணாமலை போன்றவர்கள், கையிலே வேலை பிடித்து நடந்து வந்தாலும், ஓடி வந்தாலும், உருண்டு வந்தாலும், போலியாக காவடி சுமந்து சென்றாலும், முருக பக்தர்கள் நிச்சயம் தமிழக முதல்வரின் கரத்தை தான் பலப்படுத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.