பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் : கூடலூர் அருகே அதிர்ச்சி
பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் : கூடலூர் அருகே அதிர்ச்சி
ADDED : ஆக 10, 2025 06:46 PM

பந்தலூர்:நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பழங்குடியின கிராமத்தை சேர்ந்த, 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமிகள், தாங்கள் படிக்கும் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது ஆசிரியர்கள் பாலியல் தொல்லை குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
அப்போது மூன்று சிறுமிகள் எழுந்து தங்கள் வீட்டின் அருகே உள்ள, மூன்று தாத்தாக்கள் தங்களை பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் இதுகுறித்து சைல்டு லைன் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சிறுமிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் விசாரணை செய்து, தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் விசாரணையில் குழந்தைகளுக்கு, மூன்று தாத்தாக்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
அதில் வெள்ளன் 70, விஜயன் 65, செரு 47 ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதில் வெள்ளன் மற்றும் விஜயன் இருவரும், வயது முதிர்ந்த நிலையில் நடந்து செல்ல கூட முடியாத நிலையில் இருந்தனர். அதனால் இவர்கள் இருவரையும் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜர் படுத்தவும், செரு என்பவரை மட்டும் போக்சோ வழக்கில் கைது செய்யவும் போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து செரு என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர்.பழங்குடியினர் கிராமத்தில், சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாக்கள் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.