ADDED : ஜன 28, 2024 01:31 AM
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த, சாந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை, 2022ல் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அதில், ஒருவராக சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட அவருக்கு, கடந்த 24ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.