சட்டசபையில் திடீரென கேள்வி கேட்ட அமைச்சர்: அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள்
சட்டசபையில் திடீரென கேள்வி கேட்ட அமைச்சர்: அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள்
ADDED : ஆக 31, 2026 08:13 PM

சென்னை: சட்டசபை விதியை மீறி, வேளாண் துறை அமைச்சர் வினோத் கேள்வி கேட்டதற்கு, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபையில் இன்று (ஆக.31) காலை, 9:30 மணிக்கு கேள்வி நேர விவாதம் துவங்கியது. அப்போது, வேளாண் அமைச்சர் வினோத் எழுந்து, கும்பகோணம் மகாமகம் தொடர்பாக, கேள்வி எழுப்பினார்.
அவர் கேள்வி எழுப்பி முடித்ததும், திமுக எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், வேளாண் அமைச்சர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, ''கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் கேள்வி கேட்க முடியாது,'' என, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார். ''அமைச்சர்கள் கேள்வி கேட்பது சபை மரபல்ல,'' என, அமைச்சர் செங்கோட்டையன் எடுத்துரைத்தார்.
இதையடுத்து, வேளாண் அமைச்சர் பேச்சு சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட திமுக கோவி.செழியன், ''அமைச்சர் கேள்வி கேட்டு, அமைச்சர் பதில் சொன்னதாக வரலாறு இல்லை. இது, கடைசி கேள்வியாக இருக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்,'' என்றார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர், ''தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சி என்பதால், அமைச்சர் ஆர்வத்தில் கேட்டுள்ளார். அவர் கேள்வி கேட்டதை விட்டு விடுங்கள். நான் கேட்கிறேன். கும்பகோணம் மகாமகம் தொடர்பாக நடந்து வரும் ஏற்பாடுகள் குறித்து, அறநிலையத்துறை அமைச்சர் விளக்க வேண்டும்,'' என்றார்.
இதைத் தொடர்ந்து, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:
உலகப் புகழ் பெற்ற மகாமகம் விழா, 2028ம் ஆண்டு நடக்க உள்ளது. இது தொடர்பாக, முதல்வருடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளேன். மாவட்ட கலெக்டர், அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
அங்குள்ள எந்தெந்த கோவில்களுக்கு புனரமைப்பு பணிகள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதை அறிய, குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு அறிக்கை தயாரித்துள்ளது. ஓரிரு நாட்களில், அது என்னிடம் ஒப்படைக்கப்படும். இந்திய அளவில் அனைவரும் பாராட்டும் வகையில், மகாமகம் விழா நடத்தி முடிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
