ADDED : ஜன 15, 2024 02:20 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே டூ -- வீலர் மோதிய விபத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறை துணை செயலர் பிரதாப் ஐ.ஏ.எஸ்.,சின் தந்தை முருகவனம், 56, உயிரிழந்தார்.
வத்திராயிருப்பு, மறவர் தெற்கு தெருவில் வசித்த அவர் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு விவசாய வேலைக்கு ஆட்களை அமர்த்துவதற்காக கூமாபட்டி சென்று, தன் டூ - வீலரில் வத்திராயிருப்பிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
முருகவனம் ஓட்டிய இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில், சேது நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிச்சை உட்கார்ந்திருந்தார்.
மூலக்கரை அருகே வந்த போது எதிரே கூமாபட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மகேந்திரன், 30, ஓட்டி வந்த டூ - வீலர் இவர்கள் சென்ற வாகனம் மீது மோதியது.
இதில், மகேந்திரன், முருகவனம் பலத்த காயமடைந்து, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முருகவனம் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
முருகவனம் உடலுக்கு அமைச்சர் மூர்த்தி, விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி., சீனிவாச பெருமாள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.