தங்கத்திற்கு போட்டியாக புதிய உச்சம் தொடும் வெள்ளி: இன்றைய நிலவரம் இதோ!
தங்கத்திற்கு போட்டியாக புதிய உச்சம் தொடும் வெள்ளி: இன்றைய நிலவரம் இதோ!
UPDATED : டிச 11, 2025 09:47 AM
ADDED : டிச 11, 2025 09:45 AM

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 9) ஆபரண தங்கம் கிராம் 12,000 ரூபாய்க்கும், சவரன் 96,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 199 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிசம்பர் 10) தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 12,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 96,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 207 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை, ஒரே நாளில் கிலோவுக்கு 8,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,050க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.209க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
வெள்ளிக்கு மவுசு
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், 'தொழிற்சாலைக்கான வெள்ளி பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும், எதிர்காலத்தில் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால், முதலீட்டாளர்களின் பார்வை வெள்ளி பக்கம் திரும்பியுள்ளது. வெள்ளி மீது அதிக முதலீடு செய்யப்படுகிறது. இது போன்ற காரணங்களால் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது, என்றார்.

