தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை: ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை
தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை: ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை
UPDATED : ஜன 09, 2026 10:57 PM
ADDED : ஜன 09, 2026 10:44 AM

சென்னை: ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து வழக்கை, ஜன.21ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனையடுத்து ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், இன்று (ஜனவரி 09) தியேட்டர்களில் வெளியாகும்' என படக்குழு அறிவித்திருந்தது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சென்சார் போர்), படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இந்த பிரச்னை காரணமாக 'ரிலீஸ்' நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக் ஷன்ஸ் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியானது.
தீர்ப்பில் நீதிபதி ஆஷா கூறியிருப்பதாவது: விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க வேண்டும். மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார். மேலும் அவர் கூறியதாவது:
* ஒரு உறுப்பினர் புகாரை கொண்டு எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும்?
* தணிக்கைக்குழுவின் திருத்தங்களை படக்குழு மேற்கொள்ள வேண்டும்.
* புகார் உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்டு உள்ளது, தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
* பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால் தணிக்கை சான்று வழங்கியாக வேண்டும்.
* படத்திற்கு யுஏ சான்று வழங்கியதும் தலைவருக்கான அதிகாரம் முடிந்தது.
* தணிக்கை குழு தலைவர் அதிகாரத்தை மீறி மறு ஆய்வுக்கு அனுப்பியதால் நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளது.
* பெரும்பான்மை உறுப்பினர்கள் முதலில் எடுத்த முடிவின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து பட நிறுவனம் வழக்கு தொடரவில்லை. ஆனால், தனி நீதிபதி அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தலைமை நீதிபதி, ''தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி எதற்காக உத்தரவு பிறப்பித்தார். வழக்கு தொடர்ந்த மறுநாள் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எதற்காக உத்தரவு பிறப்பித்தார். தணிக்கை வாரியத்துக்கு எதற்காக உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன,'' என்று கேள்வி எழுப்பினார்.
சென்சார் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் வழக்கை வரும் ஜன., 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் மேல்முறையீடு மனு குறித்து பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இதனால், ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

