பணியிடங்கள் இருந்தும் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைக்காத எஸ்.ஐ.,க்கள்
பணியிடங்கள் இருந்தும் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைக்காத எஸ்.ஐ.,க்கள்
ADDED : மே 17, 2025 04:03 AM

மதுரை: தமிழக காவல் துறையில் 2011ல் எஸ்.ஐ.,யாக சேர்ந்தவர்களில் 848 பேருக்கு போதிய பணியிடங்கள் இருந்தும் 15 ஆண்டுகளாகியும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதில் 40 பேர் பதவி உயர்வு பெறாமலேயே இறந்து விட்டனர்.
காவல்துறையில் ஆண்டுதோறும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப எஸ்.ஐ., பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அடுத்தாண்டு 1352 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இந்தாண்டு ஜூன் 28, 29ல் நடக்கிறது. அதுபோல் கடந்த பத்தாண்டுகளில் 2013, 2014, 2021, 2023ம் ஆண்டுகளுக்கு ஆயிரக்கணக்கான எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பணியில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டராக பதவிஉயர்வு பெறுவர்.
ஆனால் 2011ல் சேர்ந்த 1090 பேருக்கு பத்தாண்டுகளாகியும் பதவி உயர்வு அளிக்கப்படாமல் இருந்தது.
தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்தாண்டு 242 பேருக்கு மட்டும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. மீதமுள்ள 848 பேருக்கு போதிய பணியிடங்கள் இருந்தும் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. இதனால் இவர்களுக்கு பின் பணியில் சேர்ந்த அடுத்தடுத்த பேட்ச் எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் புதிய போலீஸ் ஸ்டேஷன்கள், சிறப்பு பிரிவுகளுக்கு என 483 பணியிடங்கள் காலியாக உள்ளன. சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பலர் மாற்றுப்பணியாக சிறப்புப்பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பற்றாக்குறை நிலவுகிறது. நகர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்டேஷன்களில் குற்றப்பிரிவுக்கென இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவில்லை. அதேபோல் புறநகர் பகுதியில் இன்னும் ஒரு ஸ்டேஷனிற்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற அடிப்படையிலேயே பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு குற்றப்பிரிவுக்கென இன்ஸ்பெக்டர் பணியிடங்களை உருவாக்கலாம். தகுதியுள்ளோருக்கு பதவி உயர்வு அளித்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2011ல் பணியில் சேர்ந்தவர்களில் 40 பதவி உயர்வு பெறாமலேயே இறந்து விட்டனர். மீதமுள்ள 848 பேர்களில் சிலர் ஓய்வு வயதை நெருங்கி வருகிறார்கள். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.