ADDED : ஜன 01, 2024 03:14 AM
சென்னை : 'நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் உறை பனியும், பிற பகுதிகளில் இரவு நேரங்களில் பனி மூட்டமும் காணப்படும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நீடிக்கிறது.
இது அடுத்த, 48 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, அரபிக்கடலில் வலுப்பெற வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜன., 6 வரை இதே நிலை தொடரும். நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது. அது, வரும் நாட்களில் தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும்.
மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.