வெறும் அரசியல் முழக்கமாக மாறிய சமூக நீதி: கவர்னர் ரவி வேதனை!
வெறும் அரசியல் முழக்கமாக மாறிய சமூக நீதி: கவர்னர் ரவி வேதனை!
ADDED : டிச 06, 2024 06:01 PM

சென்னை: '' ஒரு காலத்தில் அம்பேத்கர் கொண்டிருந்த பார்வையின் மையமாக இருந்த சமூக நீதி, துரதிருஷ்டவசமாக வெறும் அரசியல் முழக்கமாக மாறிவிட்டது,'' என கவர்னர் ரவி கூறினார்.
அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: விரிவான, வலுவான மற்றும் உறுதியான அரசியலமைப்பை வடிவமைப்பதிலும், நீதிசார்ந்த மற்றும் சமத்துவ இந்தியாவுக்கான அரசியலமைப்பு அடித்தளத்தை அமைப்பதிலும் அம்பேத்கர் முக்கிய பங்காற்றினார்.
தலித் சமுதாயத்திற்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 40% அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் தலித்துகளின் துயரமான நிலையை எதிர்கொள்கின்றனர். அச்சமூக பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வழக்குகளில் தண்டனை பெறுவோர் சதவீதம், கவலையளிக்கும் வகையில் தேசிய சராசரி தண்டனை விகிதத்தில் பாதியாக உள்ளது.
ஒரு காலத்தில் அம்பேத்கர் கொண்டிருந்த பார்வையின் மையமாக இருந்த சமூக நீதி, துரதிருஷ்டவசமாக வெறும் அரசியல் முழக்கமாக மாறிவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் உறுப்பினர்களுக்குப் பதவி மறுப்புச் செய்திகள் இந்தக் கடுமையான அநீதியை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டை நாடு ஆண்டு முழுவதும் கொண்டாடுகிறது. இந்த தருணம் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான நமது கூட்டு மற்றும் தனிப்பட்ட பொறுப்பின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக அமைய வேண்டும். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்தவும் உள்வாங்கவும், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் சமூக நீதிக்காக இடைவிடாமல் போராடவும் உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.