சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்குக்கு பெரும் பிரச்னை: முதல்வர் ஸ்டாலின் கவலை
சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்குக்கு பெரும் பிரச்னை: முதல்வர் ஸ்டாலின் கவலை
ADDED : அக் 19, 2024 10:39 AM

சென்னை: சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் பிரச்னையாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, கிண்டியில் நடந்த தென்மாநில காவல் துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: போதைப்பொருள் புழக்கம் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கஞ்சா பயிரிடுதல் தடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லா மாநிலமாக திகழ நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றவாளியை கைது செய்ய வரும் போது, தமிழக போலீசாருக்கு பிற மாநில போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஒத்துழைப்பு
தமிழக காவல்துறைக்கு அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை. குற்றவாளிகள் மீதான பொருளாதார நடவடிக்கையால் அவர்கள் பலவீனம் அடைவர். போதை பொருளை ஒழிக்க ஒன்றிணைந்த முயற்சி தேவை. கேரள போலீஸ் ஒத்துழைப்போடு அண்மையில் நாமக்கல் அருகே ஏ.டி.எம்., கொள்ளையர்கள் பிடிபட்டனர். இந்த சம்பவத்தில் பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள். போதைப்பொருளை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீதான பொருளாதார நடவடிக்கை எடுப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இணையதள குற்ற தடுப்பில் பல்வேறு மாநில போலீசார் இணைந்து செயல்பட வேண்டும்.
சட்ட நடவடிக்கை
சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் பிரச்னையாக உள்ளது. சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. 1390 குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் பிடிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பிற்க்கு எதிரான தீவிர சட்ட நடவடிக்கைக்கு காவல்துறையின் ஒருங்கிணைப்பு முக்கியம். சமூக வலைதள வதந்திகளை கண்காணித்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.