புதுச்சேரி அரசியலில் களமிறங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன்
புதுச்சேரி அரசியலில் களமிறங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன்
ADDED : நவ 18, 2024 01:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., வில் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், காமராஜர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது.
புதுச்சேரியில் ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்ட் ஆகியோர் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். ஜான்குமார் அரசியலுக்கு வருவதற்கு முன், லாட்டரி சீட்டு விற்பனை செய்தார்.
அவரது குருவாக லாட்டரி அதிபர் மார்ட்டின் இருந்தார். லாட்டரி தடை செய்யப்பட்டதால், கேபிள் டி.வி., நடத்திக் கொண்டு அரசியலில் கால் பதித்தார்.
தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்த நிலையில், மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேற்று புதுச்சேரி வந்தார்.
காமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமார் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். புதுச்சேரி பா.ஜ.,வில் சேர்ந்துள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 1,000 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், வெங்கடேசன், பா.ஜ., ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், அங்காளன், கொலப்பள்ளி சீனிவாஸ் கலந்து கொண்டனர்.
அரசியலில் தீவிரமாக பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன் என, ஜோஸ் சார்லஸ் கூறினார்.