வங்ககடலில் நாளை உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
வங்ககடலில் நாளை உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
ADDED : செப் 03, 2024 06:51 AM

சென்னை: மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில், நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில், அந்தமான் அருகே கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, ஆந்திரா, ஒடிசா கரையை கடந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானாவில், வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில், நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும். மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில், இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, வரும், 8ம் தேதி வரை தொடரலாம்.
சென்னையில் அடுத்த, இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த, மூன்று நாட்களுக்கு, மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.