ADDED : செப் 27, 2024 02:48 AM
சென்னை:அ.தி.மு.க., நிர்வாகி தாக்கல் செய்த அவதுாறு வழக்கில், சபாநாயகர் அப்பாவு, அக்டோபர், 18ல் மீண்டும் ஆஜராக, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 'முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, 40 எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வில் சேர தயாராக இருந்தனர். அதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்தாார்' என்று தெரிவித்தார்.
அவரது பேச்சு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனக்கூறி, அந்த கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாபுமுருகவேல், வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர் பாபு முருகவேல், குற்றம் சாட்டப்பட்ட சபாநாயகர் அப்பாவு ஆகியோர் ஆஜராகவில்லை. மாறாக, அவர்கள் தரப்பில் ஆஜராகாதது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தனர்.
அதை ஏற்ற நீதிபதி, அக்டோபர், 18ல், சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவிட்டார். மேலும், நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு கோரி, சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு புகார்தாரர் பாபு முருகவேல் தரப்பு பதிலளிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில், சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே, செப்., 13ல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.