போலீஸ் வாகனத்தில் மது குடித்த சிறப்பு எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
போலீஸ் வாகனத்தில் மது குடித்த சிறப்பு எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 14, 2024 11:52 PM
சென்னை:சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் போது, வழிக்காவலுக்கு சென்ற சிறப்பு எஸ்.ஐ., ஒருவர், போலீஸ் வாகனத்தில் மது குடித்ததால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை, விசாரணைக்காக வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லும் போது, வழிக்காவலுக்கு பரங்கிமலை ஆயுதப்படை காவலர்கள் உடன் செல்வர்.
சென்னைக்குள் இருக்கும் நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்த, புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர்கள் செல்வர்.
வழிக்காவலுக்கு செல்லும் போலீசார், கைதிகளுக்கு பீடி, சிகரெட் வாங்கி கொடுப்பது போன்ற உதவிகளை செய்வதாகவும், தங்களின் மொபைல் போன் வாயிலாக, அவர்களின் உறவினர்களுடன் பேச வைப்பதாகவும், குற்றச்சாட்டுகள் உள்ளன.
அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் சென்னை புழல் சிறையில் இருந்து, மதுரைக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் போது, வழிக்காவலுக்கு பரங்கிமலை சிறப்பு எஸ்.ஐ., லிங்கேஸ்வரன் மற்றும் போலீசார் சென்றுள்ளனர்.
எப்போது வழிக்காவலுக்கு சென்றாலும், போலீஸ் வாகனம் சென்னையை தாண்டியதும், லிங்கேஸ்வரன் சீருடையை உதறி விடுவார். போலீஸ் வாகனத்திலேயே மது குடிப்பார்.
கைதிகளுக்கு சலுகை காட்டி, அவர்களின் உறவினர்களிடம் பணம் வசூலிப்பார் என்று கூறப்படுகிறது.
போலீஸ் வாகனத்தில் சீருடை இன்றி, அவர் மது குடிக்கும் வீடியோ நேற்று வெளியானது.
இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.