ADDED : ஜூன் 26, 2026 01:32 AM
சென்னை: டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் அமல்படுத்திய, நடை ரோந்து பணியை, எஸ்.பி.,க்கள் மற்றும் துணை கமிஷனர்கள், தட்டிக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக காவல் துறையின் டி.ஜி.பி.,யாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்ற பின், மாநிலம் முழுதும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக, 'நடை ரோந்து' என்ற திட்டத்தை அமல்படுத்தினார்.
குற்றத்தடுப்பு நடவடிக்கையுடன், பொது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே, நல்லுறவு ஏற்படுத்தும் வகையில், இத்திட்டத்தை அவர் அறிவித்தார்.
நடை ரோந்து பணிகளில், காவல் நிலைய அதிகாரிகளான இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் தொடங்கி, எஸ்.பி.,க்கள் மற்றும் துணை கமிஷனர்கள் ஈடுபட வேண்டும் என, டி.ஜி.பி., அறிவித்தார்.
அதன்படி, கடந்த, 3 - 6ம் தேதி வரை, எஸ்.பி., மற்றும் துணை கமிஷனர்களாக உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இப்பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என, டி.ஜி.பி., உத்தரவிட்டும், நடை ரோந்து பணிகள் முடங்கி கிடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'புதிதாக பொறுப்பேற்கும் போலீஸ் அதிகாரிகள், இது போன்ற திட்டங்களை அமல்படுத்தும் போது, பெயரளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு, படம் எடுத்து, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பி விடுவர்.
அதன் பின் அவற்றை கிடப்பில் போட்டு விடுவர். அப்படித்தான் நடை ரோந்து பணியும் ஆகிவிட்டது' என்றனர்.
