தமிழக மீனவர்களின் 74 படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு
தமிழக மீனவர்களின் 74 படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு
ADDED : ஏப் 05, 2025 05:49 AM

ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக, 2018 --- 2020 வரை ராமேஸ்வரம் முதல் நாகை வரை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின், 74 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்தது.
இப்படகுகளை 2022ல் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி நீதிமன்றங்கள் அரசுடைமையாக்கின.
இப்படகுகள் சேதம் அடைந்து, இலங்கை கடற்கரையில் கிடக்கும் நிலையில், யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை நடுக்கடலில் இப்படகுகளை மூழ்கடிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதனால், எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களின் வலைகள், மூழ்கடித்த படகுகளில் சிக்கி சேதமடையும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே, இதேபோன்று மீனவர் வலைகளை சேதப்படுத்த, கடந்த 2019ல், சேதமடைந்த 15 பஸ்களை, காங்கேசன்துறையில் இருந்து நடுக்கடலில் போட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் இந்த முடிவை தடுத்து நிறுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.