செயற்கை நுண்ணறிவின் யுகத்தில் தர்மத்தின் நிலை: சிருங்கேரி ஆச்சார்யர் விளக்கம்
செயற்கை நுண்ணறிவின் யுகத்தில் தர்மத்தின் நிலை: சிருங்கேரி ஆச்சார்யர் விளக்கம்
ADDED : நவ 11, 2025 04:52 AM

திருப்பூர்: ''ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே வழி. அதனை தவிர வேறு வழி இல்லை,''என சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் விளக்கினார்.
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் ஸ்ரீ சுவாமிகள் நேற்று மஹாவீர் பிரசாத் ஜயபூர்யாவின் அழைப்பினை ஏற்று, அங்கு ஸ்ரீ சுவாமிகளின் அருளுரையினை கேட்க பக்தர்கள் குழுமியிருந்தனர்.
அதில், பா.ஜ. எம்.பி. டாக்டர் சுதன்ஷு திரிவேதி, ''செயற்கை நுண்ணறிவு ஆட்சி செய்யும் யுகத்தில், மக்கள் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் நிலையில், தர்மத்தின் நிலைதான் என்ன?” எனும் மன நிலையில் மக்கள் உள்ளனரே எனும் சந்தேகத்தை முன்வைத்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்ரீ சுவாமிகளின் அருளுரை:
ஒரு கேள்வி கேட்போம், செயற்கை நுண்ணறிவு வருவதற்கு முன்பே இவ்வுலகில் சந்தோஷமும் துக்கமும் இருந்ததா என்றால் 'ஆம்' என்பதே பதில். அதேபோல் இன்றும், இத்தகைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும் சந்தோஷமும் துக்கமும் உள்ளதா? என்றால் இதற்கும் பதில் 'ஆம்' தான்.
ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க, மற்றவர் துன்பப்படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு, இறுதியில் ஒப்புக்கொள்ள வேண்டியது, அது ஒருவரின் முந்தைய பிறவிகளில் செய்த தர்மம் அல்லது அதர்மத்தின் விளைவு என்பதே. மேலும், தர்மமும், அதர்மமும் ஒருபோதும் இடமாற்றம் பெறவில்லை. எது நேற்று தர்மமோ அதேதான் இன்றும் தர்மம், நாளையும் அதுவே தர்மமாகவே இருக்கும். இவை நிலையானவை; தர்மமில்லாத வாழ்க்கையிலும் சிலர் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், போலத் தோன்றும். ஆனால், அது தற்காலிகம்.
ஒருவர் சிறந்த வேலை செய்து நன்றாக சம்பாதித்து, பின், வேலையினை இழந்தாலும் பழைய சம்பாதிப்பின் கையிருப்பு மூலம் சில ஆண்டுகள் பழைய வசதியோடு வாழ முடியும். ஆனால், புதிய வேலை கிடைக்காவிட்டால் கடின நிலைகள் துவங்கும். அதுபோல, புண்ணியம் இருக்கும் வரை இன்பம் தொடரலாம். ஆனால், அது முடிந்த உடன், துன்பம் ஆரம்பமாகும். எனவே, ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பது தான் ஒரே வழி, தவிர வேறு வழியே இல்லை. இவ்வாறு ஸ்ரீ ஆச்சார்யர் விளக்கினார்.
கர்நாடக சங்கத்தில் சுவாமிகள் அருளுரை
அதே நாள் மாலை ஸ்ரீ ஆச்சார்யர் கர்நாடக சங்கத்திற்கு விஜயம் செய்து அருளுரை வழங்கினார். தொடர்ந்து, இதையடுத்து, த்வாரகா ஸ்ரீ ராமர் கோவிலுக்கு சென்ற ஸ்ரீ ஆச்சார்ய சுவாமிகளை, பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். ஸ்ரீ ராமர், காமேஸ்வரர், காமேஸ்வரி, அனுமான் மற்றும் பிற தெய்வங்களின் தரிசனத்தை முடித்தபின், கோவிலுக்கு அடுத்துள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து பலரையும் அனுக்ரஹித்தார்.
தொடர்ந்து, ஸ்ரீ ஆச்சார்யர் பல வகையான பூஜை முறைகள் குறித்து உபன்யாசம் செய்யும் போது, “பகவான் யாரையும் வேறுபடுத்தி நடத்தமாட்டார்; பணக்காரர், ஏழை, பண்டிதர், பாமரர் என்பதற்கேற்ற வேறுபாடு அவரிடம் இல்லை. பகவான் ஒரு ஒளி மிகுந்த அக்னியினை போலானவர்; வெப்பத்தைப் பெற விரும்புபவர் அதற்கருகில் செல்வது போல, யார் சென்றாலும் தெய்வீக அனுக்ரஹம் அவர்களுக்கு கிடைக்கும்.
மனிதனின் முயற்சி மற்றும் தெய்வீக அருள் - இவை இரண்டும் சேரும் போது, மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பகவத் ஸ்மரணமில்லாமல் எந்த உலகியலான முயற்சியும் மனிதனை சம்சாரச் சுழலில் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்லும். பிரார்த்தனைக்கும் பூஜைக்கும் ஒரு சிறிய நேரமாவது ஒதுக்காமல் யாரும் உண்மையான முன்னேற்றத்தையும், பிறவி சுழலிலிருந்து விடுதலையையும் அடைய முடியாது.” என்றார்.
எது நேற்று தர்மமோ அதேதான் இன்றும் தர்மம், நாளையும் அதுவே தர்மமாகவே இருக்கும். இவை நிலையானவை; தர்மமில்லாத வாழ்க்கையிலும் சிலர் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், போலத் தோன்றும். ஆனால், அது தற்காலிகம்

