நாளை தமிழகம் வருகிறார் சிருங்கேரி சங்கராச்சாரியார்
நாளை தமிழகம் வருகிறார் சிருங்கேரி சங்கராச்சாரியார்
ADDED : அக் 25, 2024 05:17 AM

சென்னை: ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகளின், 'விஜய யாத்ரா 2024 சென்னை' நாளை துவங்குகிறது.
பெங்களூரில் இருந்து, நாளை இரவு காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்திற்கு வருகிறார். மறுநாள் காஞ்சிபுரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், 28ல் சென்னை வருகிறார். அன்று முதல், நவம்பர் 13 வரை சென்னையில் தங்கி, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பின், திருப்பதி செல்ல உள்ளார்.
ஸ்ரீசாரதா பீடத்தின், 36-வது பீடாதிபதியான ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சன்னிதானம், தன் சீடராக ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தை நியமித்துள்ளார். இவர், திருப்பதி தேவஸ்தான வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வர் சிவசுப்ரமணிய அவதானி -- சீதா நாகலட்சுமி தம்பதிக்கு, 1993 ஜூலை 24ல் பிறந்தவர்.
இவரது பூர்வாசிரம பெயர் வேங்கடேச பிரசாத சர்மா. இவர் வேதத்தையும், சாஸ்திரங்களையும் முழுமையாக படித்தவர். 2015 ஜூன் 23ல் சன்னியாச தீட்சை அளிக்கப்பட்டு, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக உள்ளார். இவர் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
கேரள மாநிலம் காலடி கிராமத்தில் பிறந்த ஸ்ரீஆதிசங்கரர். அவரால் தோற்றுவிக்கப்பட்டது கர்நாடக மாநிலம் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம். சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்தியாவின் தென் மாநிலங்களை அன்னிய ஆட்சியில் இருந்து பாதுகாத்த விஜயநகர பேரரசு உருவாக காரணமான பீடம் சிருங்கேரி.
![]() |